Wednesday, January 27, 2010

சுஸ்கி & விஸ்கி தோன்றும் பேரிக்காய் போராட்டம்!

வணக்கம் நண்பர்களே,
சிறுவயதில் ஒரு ஐம்பது முறையாவது நான் படித்த வெகுநாளாக பதிவிட வேண்டும் என நினைத்து கொண்டிருந்த கதை இது சுஸ்கி- விஸ்கி குழுவினரின் ஒரு பேரிக்காய் போராட்டம். மினி லயனில் வெளிவந்த முழுவண்ண சித்திரக்கதை. சிறுவயதில் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் ஒருமுறை படித்து விடுவேன் பின் தூங்குவதற்கு முன் ஒருமுறை என இக்கதை மிகவும் கவர்ந்தது. வருத்தமான விஷயம் என்னவென்றால் இக்கதை என்னிடம் இல்லை. இணையத்தில் எப்படியோ தேடி பிடித்து எடுத்து விட்டேன். ஆனால் ஆங்கில மொழியில் கூட இல்லை. Dutch மொழியில் தான் கிடைத்தது. ஆனாலும் படங்களை பார்த்த போது சந்தோசமாக இருந்தது. சுஸ்கி - விஸ்கி கதாபாத்திரங்களை பற்றி காமிக்ஸ் பிரியன் பதிந்த பதிவை இங்கே பார்க்கவும்.இதன் அட்டை படத்தை தந்து உதவிய அ.கொ.தீ.க தலைவருக்கு மிக்க நன்றி.ஆங்கிலத்தில் வெளியான சுஸ்கி & விஸ்கி கதைகள் என்னவென்று காண இங்கே கிளிக்கவும். இனி கதைக்கு வருவோம்.


ஆர்வில் அங்கிள் இரவு பாருக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் வினோதமான பேரிக்காய் போல் தலை கொண்ட சிறிய குள்ளமான உருவத்தை காண்கிறார். அந்த உருவம் அங்கே வரும் அகதா ஆண்டியை கண்டு பயந்து ஓடுகிறது. அந்த சிறிய உருவத்தை ஆர்வில் அங்கிள்,அகதா ஆண்டி,சுஸ்கி மற்றும் விஸ்கி ஆகியோர் காரில் பின்தொடருகின்றனர். பயந்து ஓடும் அந்த பேரிக்காய் தலை புரபசர் பாரபாஸ் வீட்டில் புகுந்து விடுகிறது. அவர்களும் உள்ளே சென்று புரபசர் பாரபாஸ்ரிடம் விசாரிக்கிறார்கள். அவர் தான் கால இயந்திரத்தை வைத்து ஆராய்ச்சி செய்யும் போது அந்த இயந்திரத்தில் இருந்து திடீரென வெளிவந்து ஓடி விட்டதாகவும் கூறுகிறார்.அதே சமயம் அந்த பேரிக்காய் தலை புரபசர் வீட்டை விட்டு வெளியேறி ஓடுகிறது.

அனைவரும் அதை தேடுகின்றனர் வீட்டில் இல்லாமல் போகவே காலஇயந்திரத்தில் எதாவது தகவல் கிடைக்கிறதா என பார்க்கின்றனர்.காலஇயந்திர திரையில் அந்த பேரிக்காய் தலை உருவத்தின் மணைவி தெரியவே அதனுடன் பேசுகின்றனர்.அவளது கணவன் திடீரென காணாமல் போய்விட்டதாக கூறவே அந்த பேரிக்காய் உருவத்தை மீண்டும் தேடுகின்றனர்.தேடலுக்கு பின் அதை நாய்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு கொண்டு வருகின்றனர்.பின் அதனிடம் விசாரிக்கும் போது தாங்கள் பேரிக்காய் தலையர்கள் தங்கபேரிக்காய் வளர்த்து வாழ்வதாகவும்,தங்களை விட பலமான எதிர் பேரிக்காய்தலையர்களின் கூட்டம் தங்கள் ராஜாவையும்,ராணியையும் கடத்தி வைத்திருப்பதாகவும், தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு விளைவிப்பதாகவும் கூறுகிறது. மேலும் ஒரு டிராகன் தங்கள் தங்கபேரிக்காய் தோட்டத்திற்கு தண்ணீர் வர விடாமல் தடுத்து கொண்டு இருப்பதாகவும் கூறுகிறது.இதை கேட்கும் குழுவினர் அதை மீண்டும் அங்கு கொண்டு சேர்ப்பதாக கூறுகின்றனர்.


பின் சிலநேரம் கழித்து ஆர்வில் அங்கிள் கால இயந்திரத்தின் ஒரு விசையை இழுக்கவே சுஸ்கி மற்றும் ஆர்வில் அங்கிள் அதனுள் இழுத்து செல்லப்பட்டு பேரிக்காய் தலையர்களின் உலகத்தை அடைகின்றனர்.அங்கே இருக்கும் டிராகனை சுஸ்கி கொன்று அடைத்து வைக்கப்பட்ட தண்ணீரை திறந்து விட்டு பேரிக்காய் தலையர்களின் தோட்டங்களுக்கு பாய செய்கிறான். இதை கண்ட பேரிக்காய் தலை கூட்டம் அவனை இளவரசனாக தேர்ந்தேடுகிறது.பின் இவர்களை காணாமல் தேடும் விஸ்கி அவர்கள் பேரிக்காய் தலையர்களின் உலகத்தில் இருப்பதாய் அறிந்து அவளும்,அகதா ஆன்ட்டியும் பேரிக்காய் தலையோடு பேரிக்காய் தலையர்களின் உலகத்தை அடைகின்றனர்.

பின் அங்கே அவர்களை தாக்க எதிர் பேரிக்காய் தலையர்கள் வருகிறார்கள். அவர்களை ஆர்வில் அங்கிள் அடித்து விரட்டுகிறார். சுஸ்கியின் பேரில் அவர்கள் மேல் மிளகு பொடி தூவியும் விரட்டுகின்றனர். நமது மினி லயனில் மூக்கு பொடி என்று இருந்ததாக நினைவு.அவர்களை விரட்டிய பின் பேரிக்காய் தலையர்கள் நிம்மதியாக வியாபாரம் பார்க்கின்றனர். ஆனால் சுஸ்கி மற்றும் விஸ்கி குழுவினரால் விரட்டியடிக்கப்பட்ட எதிர் பேரிக்காய் தலையர்கள் திரும்பி வருவார்கள் என பயப்படுகிறார்கள். சுஸ்கி மற்றும் விஸ்கி குழுவினர் எதிர் பேரிக்காய் தலையர்கள் படையெடுத்து சென்று போரிட்டு அவர்களது ராஜா,ராணியை மீட்க முடிவெடுக்கின்றனர்.அவர்களது கோட்டையை நோக்கி படையெடுத்து செல்கின்றனர்.


படையெடுத்து சென்றவர்கள் வென்றார்களா? எவ்வாறு அவர்கள் கோட்டையை தகர்த்தார்கள்? பேரிக்காய் தலையர்களின் ராஜா,ராணியை மீட்டார்களா? என்பது மிக நகைசுவையுடன் செல்கிறது. ஆர்வில் அங்கிளின் ஜாடி பூதம், அது தரும் ஐடியா போன்றவை ரசிக்க வைக்கும்.


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse All - உலவல்



Follow This Blog இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யவும் .

Continue...

Monday, January 18, 2010

கிமுவில் சோமு


நண்பர்களே,
கிமுவில் சோமு என்ற இந்த காமிக்ஸ் பிரபல படங்களான இம்சை அரசன் புலிகேசி,அறை எண் 305ல் கடவுள் ஆகிய படங்களை இயக்கிய சிம்பு அவர்களால் வரையப்பட்டு ஆனந்த விகடனில் 1999 ஆம் ஆண்டு 25 வாரங்களாக தொடராக வெளிவந்தது. சிறந்த சித்திரங்களுடன் நகைசுவையுடனும் வாசகர்களின் பாராட்டை பெற்றது.இது ஆனந்த விகடனில் வெளியான நேரத்தில் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை.தற்போது முழு புத்தகமாக படித்ததில் மகிழ்ச்சி.மேலும் இந்த சித்திரகதை உருவாக நமது கதாநாயகர்களான இரும்புக்கை மாயாவி,லக்கி லூக் ஒரு தூண்டுதலாக அமைந்ததாக சிம்பு அவர்கள் கூறியுள்ளார். இக்கதை 2004 ஆம் வருடமே நர்மதா பதிப்பகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தான் எனக்கு தெரிந்தது.சிம்பு அவர்கள் அவரது என்னுரையில் நமது லயன் காமிக்ஸ் கதாநாயகர்கள் ஆர்ச்சி,இரும்புக்கை மாயாவி ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.அவர் தற்போது எடுத்து கொண்டிருக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படம் கூட நமது லக்கி லூக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.சரி நாம் கதைக்கு வருவோம்.

கதைக்கு போகும் முன் கதையின் கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.கதையின் கதாநாயகன் சோமு விஞ்ஞானி அவனது நண்பன் வெங்கி. சோமுவின் மாமா மகள் சுட்டிப்பெண் ருக்கு மற்றும் கயவர்கள் கபாலி,பிச்சு.மேலும் முல்லா தாத்தா இவர்களுடன் குட்டி டினோசர் சுப்புணி.டினோசர் எப்படி வந்தது என்பதை கதையில் காண்க.

சிறுவன் சோமு தன் தாத்தாவின் மேல் பாசமாக இருக்கிறான்.அவனது தாத்தா அவருக்கு கிடைத்த ஒரு விசித்திர பலகையின் துணை கொண்டு 12 வருடங்களாக ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.ஒருநாள் ஆராய்ச்சியில் ஏதோ வெடித்து தாத்தா இறந்து போகிறார்.மனம் உடையும் சோமு அந்த விசித்திர பலகையை எடுத்து வைத்து கொள்கிறான்.மேல்படிப்புக்காக தன் மாமா ஊருக்கு சென்னை செல்கிறான்.காலங்கள் உருண்டோடுகின்றன.பதினெட்டு வருடங்களுக்கு பிறகு சோமு படித்து விஞ்ஞானி ஆகிறான்.

தன் தாத்தா ஆராய்ச்சியை தொடர்கிறான்,வெற்றி கொள்கிறான்.தன் தாத்தாவின் கனவான கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறான். தன் கண்டுபிடிப்பை தன் மெக்கானிக் நண்பன் வெங்கியிடம் காட்டுகிறான்.இருவரும் கால பயணம் மேற்கொள்ள தயாராகின்றனர்.அப்போது சோமுவின் மாமா பெண் ருக்கு வருகிறாள்.அவள் அடம் பிடிப்பதால் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்து கால இயந்திரத்தில் ஏறி கி.பி 1450 செல்கின்றனர். அங்கே அந்த காலத்தில் வேட்டைக்கு வந்த மன்னர் படை துரத்தவே மீண்டும் நிகழ்காலம் வருகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் கயவர்கள் கபாலியும்,பிச்சுவும் அந்த கால இயந்திரத்தை தாங்கள் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவு பண்ணுகின்றனர்.சோமு,வெங்கியை மிரட்டி ருக்குவை பணயக்கைதியாக எடுத்துகொண்டு கால இயந்திரம் மூலம் கிமு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு பின்னால் செல்கின்றனர். என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் சோமுவும் வெங்கியும் முல்லா தாத்தாவின் உதவியை நாடுகின்றனர்.அவர் வைத்திருக்கும் பறக்கும் கம்பளம் மூலம் சோமு இன்னொரு கால இயந்திரம் உருவாக்கி அவர்களும் கிமு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு பின்னால் பயனமாகின்றனர். அவர்கள் கபாலி,பிச்சுவை பார்த்தார்களா,ருக்குவை காப்பாற்றினார்களா என்பது மிகவும் சுவைபட விறுவிறுப்பாக செல்கிறது.

கதையில் அவர்கள் பயணிக்கும் டினோசர் காலம், ஆதிவாசிகள்,செவ்விந்தியர்கள்,சக்கரத்தை கண்டுபுடிக்கும் மனிதன்,டைட்டானிக் கப்பல்,கொலம்பஸ்,ரோமானிய பேரரசு,அசோக சக்கரவர்த்தி,கிளியோபட்ரா ஆகியவை மனதை கவரும் வண்ணம் உள்ளன.வாங்கி படித்து பாருங்களேன்.இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்கவும். விலை ரூபாய் 40/-.




web counter

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse All - உலவல்



Follow This Blog இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யவும் .

Continue...